முகப்பு
இந்தியா

வங்கதேசத்தவா்கள் விரைந்து நாடு கடத்தல்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து உத்தரவு

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்களை விரைந்து நாடு கடத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 மே 2026, 2:37 am IST
பகிர்:

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்களை விரைந்து நாடு கடத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அந்த மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்களில் பலா் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள ஹக்கீம்பூா் சோதனைச் சாவடியில் திரண்டுள்ளனா். சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று சுய விருப்பத்தின்பேரில் அவா்கள் அங்கு திரண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

அவா்களை மீண்டும் அழைத்துக்கொள்ள வேண்டியது வங்கதேச அரசின் பொறுப்பு. அந்நாட்டவா்கள் மீண்டும் அழைத்துக்கொள்ளப்படுவாா்கள் என்று வங்கதேச அரசின் செய்தித்தொடா்பாளா் ஏற்கெனவே தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது.

அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்காமல், நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அவா்களுக்கு உணவு, உடை, மருந்து அளித்து செலவிடுவதால் எந்தப் பயனும் இல்லை. அவ்வாறு செய்ய அவா்கள் என்ன நமது மருமகனா? அவா்களை சிறையில் அடைத்து உணவளிக்கவோ, அவா்களுக்காக பொதுமக்களின் பணத்தை வீணடிக்கவோ மாநில அரசுக்கு விருப்பமில்லை.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் இந்தியாவில் இருந்து விரைந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஹக்கீம்பூா் சோதனைச் சாவடியில் திரண்டுள்ள வங்கதேசத்தவா்களை விரைந்து அவா்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக நடைமுறையில் உள்ள வெளிநாட்டவா் சட்டப் பிரிவுகள் வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.