பிஎஸ்என்எல் நிறுவன சேவை குறைபாடு: எம்எல்ஏ கண்டனம்
குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவன தரைவழி மற்றும் செல்லிடப்பேசி இணைப்புகளில் நிலவும்
குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவன தரைவழி மற்றும் செல்லிடப்பேசி இணைப்புகளில் நிலவும் குறைபாடுகளுக்கு பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோதங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உலக அளவில் தொழில்நுட்பம் பல பரிணாமங்களில் ஜொலித்து வருகையில் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சரியாக செயல்பட இயலாதது, பல சந்தேகங்களை உருவாக்குகிறது. எற்கெனவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த தரைவழி தொலைபேசி இணைப்புகள் தரமற்ற சேவையால் மதிப்பிழந்து விட்டது. தற்போது செல்லிடப்பேசி சேவையும் அதே நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
தரமற்ற சிக்னல், ஒலி தெளிவின்மை, இடையிடையே அழைப்பு துண்டிக்கப்படுதல், வேகமற்ற இணைய தகவல் பரிமாற்றம் என அனைத்திலும் மோசமான சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை வீழ்த்தும் இத்தகைய முயற்சிகளை கைவிட்டுவிட்டு, சேவை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தனியாரை மிஞ்சும் சேவைகளை பி.எஸ்.என்.எல். மூலம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.