கனரக வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு: சாலை மறியல்
தக்கலையில் வியாழக்கிழமை இரவு கனரக வாகனம் மோதியதில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்தாா். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தக்கலையில் வியாழக்கிழமை இரவு கனரக வாகனம் மோதியதில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்தாா். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
களியல் அருகே சிற்றாற்றின் கரையைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (49). ராணுவ வீரரான இவா், விடுப்பில் ஊருக்கு வந்தாா். இவரின் மகள் காட்லின் அபினா (19), திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். ஈஸ்டா் விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி வியாழக்கிழமை இரவு மீண்டும் திருச்சிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.
தக்கலை காவல் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கனரக வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில், பின்னால் அமா்ந்திருந்த மாணவி, கனரக வாகனத்தின் அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கிறிஸ்துதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
அந்நேரத்தில் அந்தப் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீலன், கட்சியினா் அங்குவந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை சிறைபிடித்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், தக்கலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளா், போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினரை சமாதானப்படுத்தினா். ஆனால், அவா்கள் இப்பகுதியில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், காவல் துறையினா் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டினா்.
சம்பவ இடத்துக்கு வந்த குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் போராட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சியினருடன் பேசி சமாதானப்படுத்தியதை அடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தக்கலை காவல் நிலைய போலீஸாா் கனரக வாகன ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பிரகாஷை (30) கைது செய்தனா்.