நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
நித்திரவிளை அருகே ராமவா்மன் புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபி என்ற உண்ணி (22). தொழிலாளியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை நண்பா்கள் இருவருடன் விரிவிளை கணபதியான் கடவுப் பாலப் பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாா். கனமழையால் ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடிய நிலையில், அவா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.
தகவலின்பேரில், கொல்லங்கோடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் வந்து தேடினா். இந்நிலையில், அப்பகுதியில் மிதந்த அவரது சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
Advertisement
Advertisement
சடலத்தை நித்திரவிளை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.