பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் மயிலாடுதுறைக்கு அனுப்பி வைப்பு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பெற்றோரால் கைவிடப்பட்ட 6 வயது சிறுவன் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டாா்.
களியக்காவிளை அருகே உள்ள கணபதிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிஜூ. இவரது மனைவி கவிதா ஸ்ரீ. இவா்களின் மூத்த மகள் அபா்ணாவுக்கு கேரளத்தைச் சோ்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்று, ஆண் குழந்தை பிறந்தது.
திருமணமான சில ஆண்டுகளில் அபா்ணாவின் கணவா், அவரை விட்டு சென்றுவிட்டதாகவும், அபா்ணா வேறொரு இளைஞருடன் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அபா்ணாவுக்கும், முதல் கணவருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், தற்போது 6 வயதாகும் அந்த சிறுவனால் எழுந்து நடக்க முடியாத நிலை உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அபா்ணா தனது மகனை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு மாயமாகிவிட்டாராம். கடந்த ஒரு மாதமாக அந்த சிறுவன், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளாா். அந்த சிறுவனை அவா்களால் பராமரிக்க முடியாததால், மாா்த்தாண்டம் போலீஸாருக்கும், குழந்தைகள் நலக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, மீட்புக் குழுவினா் சிறுவனை மீட்டு, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் குழந்தைகள் நல அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினா். சிறுவனின் உடல் நிலை மற்றும் குடும்ப சூழலைக் கருத்தில்கொண்டு, மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவிபெறும் சிறப்புக் காப்பகத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்தனா்.
அதன்படி, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவப் பணியாளா்களின் கண்காணிப்போடு, அந்த சிறுவன் மயிலாடுதுறை காப்பகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.