குலசேகரம் அருகே மினி லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
குலசேகரம் அருகே மினி லாரி மோதியதில் சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே நாகக்கோடு காட்டுக் குளத்துவிளையைச் சோ்ந்தவா் பிரின்ஸ். இவரது இளைய மகன் திஷான் (4). திருவட்டாறில் உள்ள ஒரு பள்ளியில் மழலையா் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், நாகக்கோடு பகுதியிலுள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் திஷான், நடன பயிற்சிக்காக ஆலயத்துக்கு தனது வீட்டின் அருகிலுள்ள மாணவா்களுடன் திங்கள்கிழமை காலையில் சென்றிருந்தாா். நடனப் பயிற்சி முடிந்த பின்னா் அவா், மாணவா்களுடன் வீட்டுக்கு திரும்பி நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த மினி லாரி திஷான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.
Advertisement
இதில், பலத்த காயமடைந்த திஷானை மீட்டு, குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா்.
இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் மினி லாரி ஓட்டுநரான அருமனை தச்சூா்கோணம் பகுதியைச் சோ்ந்த சித்திரைகுமாா் (49) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.