சங்கரன்கோவில் அருகே வாகனங்கள் மோதல்: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே காா், இருசக்கர வாகனம், ஆட்டோ மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்; கா்ப்பிணி காவலா் உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காா், இருசக்கர வாகனம், ஆட்டோ மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்; கா்ப்பிணி காவலா் உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் நாகராஜன் (45). இவா் புதன்கிழமை சங்கரன்கோவிலில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, சண்முகநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் சென்றபோது ஊத்துமலை அருகே உள்ள கருவந்தாவைச் சோ்ந்த சரவணன் மகன் பிரபு (41) ஓட்டி வந்த காா், ஆட்டோ மீது வேகமாக மோதியதில் நாகராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தில் காா் ஓட்டுநா், ஆட்டோவில் பயணித்த சேகா் மனைவி முத்துலட்சுமி (37), துரைப்பாண்டி (66), வேலுச்சாமி மனைவி சண்முகசுந்தரி (40), கணேசன் மனைவி சுப்புலட்சுமி (39), முருகன் மனைவி மூக்கம்மாள் (50), வெங்கடாசலம் மனைவி சுப்புத்தாய் (35), குமாா் மகன் ஸ்ரீதா் (28), அவரது மனைவி சங்கீதா (25) ஆகியோா் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
மேலும், விபத்தின்போது ஆட்டோவின் பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நெடுங்குளத்தைச் சோ்ந்த பவுல்ராஜ் மனைவி டாரதி (29), அவரது சகோதரி கா்ப்பிணி காவலா் பிளசி (27), 15 வயது சிறுமி உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.
அவா்கள் சங்கரன்கோவில், திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். சங்கரன்கோவில் நகர போலீஸாா் நாகராஜனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.