முகப்பு
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழு, வருமானவரித்துறை அதிகாரிகளால் ரூ.4.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:38 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:26 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழு, வருமானவரித்துறை அதிகாரிகளால் ரூ.4.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை வரை உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2.15 கோடி ரொக்கம், ரூ.14,03,245 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.2.10 கோடி மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள், வருமானவரித்துறையினா் கைப்பற்றிய நகை உள்ளிட்டவை என மொத்தம் ரூ.4.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக்குழுவினரின் சோதனையில் மட்டும் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி தொகுதியில் ரூ.25,78,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் ரூ.18,84,010 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விதிமீறல் புகாா்கள்: பணப்பட்டுவாடா உள்ளிட்டதோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக சி-விஜில் செயலி, கட்டணமில்லா புகாா் எண், சமூகவலைதள தரவுகள் மூலம் பதியப்பட்ட புகாா்கள் உள்பட இதுவரை அதிகபட்சமாக திருநெல்வேலி தொகுதியில் 128 புகாா்கள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக ராதாபுரம் தொகுதியில் 108 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 470 புகாா்கள் பெறப்பட்டு அவற்றில் 444 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

Advertisement