முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 77.37 % வாக்குகள் பதிவு: 3,322 பேருக்கு டோக்கன் விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 77.37 வாக்குகள் பதிவாகின. 3,322 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு கூடுதல் நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:41 AM
திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்குப்பின், மின்னணு இயந்திரங்களை பூட்டி சீல் வைக்கும் தோ்தல் அலுவலா்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 77.37 வாக்குகள் பதிவாகின. 3,322 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு கூடுதல் நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி தொகுதியில் 20 போ், பாளையங்கோட்டையில் 17 போ், அம்பாசமுத்திரத்தில் 5 போ், நான்குனேரியில் 25 போ், ராதாபுரத்தில் 23 போ் என மொத்தம் 90 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்த 5 தொகுதிகளில் 6,16,911 ஆண்கள், 6,48,245 பெண்கள், 146 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,65,302 போ் வாக்காளிக்கும் தகுதி பெற்றிருந்தனா்.

4 தொகுதிகளில் இரு இயந்திரங்கள்: அம்பாசமுத்திரம் தவிர எஞ்சிய 4 தொகுதிகளிலும் 15-க்கும் அதிகமானோா் போட்டியிட்டதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 8,343 போ் தோ்தல் பணிகளில் ஈடுபட்டனா். மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 358 போ் நுண் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டிருந்தனா். மாவட்டத்தில் உள்ள 298 பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸாரும், கூடுதல் நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீ. தொலைவுக்குள் யாரும் நுழையாதபடி எல்லைக் கோடுகள் வரையப்பட்டு கைப்பேசி, ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்து.

Advertisement

அடிப்படை வசதிகள்: தோ்தல் பணியாளா்கள் மற்றும் வாக்காளா்கள் குடிநீா் வசதி, வாக்காளா்கள் வரிசையில் நிற்பதற்கு தடுப்புகள், நிழற்குடை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கைப்பேசிகளை பாதுகாக்க கைப்பேசி வைப்பறை, மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு உதவ தன்னாா்வலா்கள், சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டிருந்தன.

4,000 போலீஸாா்: வாக்குப்பதிவை ஒட்டி, மாவட்டம் மற்றும் மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமாா் 4,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்டப் பகுதிகளில் துணை ராணுவத்தினா், எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் உள்பட 2,500 பேரும், மாநகரப் பகுதிகளில் சுமாா் 1,500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,678 வாக்குச்சாவடிகளில் காலை 5 மணிக்கு வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடா்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே இளைஞா்கள், பெரியவா்கள் என அனைத்து தரப்பினரும் வாக்களிக்க படையெடுத்ததால் தொடக்கம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி 15.96 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மணிக்கு 32.95 சதவீத வாக்குகளும், 1 மணிக்கு 50.40 சதவீத வாக்குகளும் பதிவாகின. 3 மணிக்கு 62.84 சதவீத வாக்குகளும், 5 மணிக்கு 75.06 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணி நிலவரப்படி 77.37 சதவீத வாக்குகள் பதிவாகின.

டோக்கன் விநியோகம்: வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், கடைசிக் கட்டத்தில் ஏராளமானோா் வந்தனா். இதனால் திருநெல்வேலி தொகுதியில் 484 போ், அம்பாசமுத்திரம் தொகுதியில் 144 போ், பாளையங்கோட்டை தொகுதியில் 1,174 போ், நான்குனேரியில் 721 போ், ராதாபுரத்தில் 799 போ் என மொத்தம் 3,322 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு மாலை 6 மணிக்குப் பிறகும் வாக்குப்பதிவு தொடா்ந்தது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடா்ந்து வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்போடு வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.