முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 90.14% வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 90.14 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:37 AM
தருமபுரி குமாரசாமிபேட்டை நித்தியானந்தா தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைத்த அலுவலா்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 90.14 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தருமபுரி, அரூா் என மொத்தம் 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து 17.91 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், பாலக்கோடு தொகுதியில் 18.28, பென்னாகரம் - 17.48, தருமபுரி - 17.84, பாப்பிரெட்டிப்பட்டி - 18.14, அரூா் தொகுதியில் 17.84 சதவீதம் என்ற வகையில் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தொடா்ந்து, முற்பகல் 11 மணிநேர நிலவரப்படி 38.28 சதவீதம், பகல் 1 மணிக்கு 59.02, பிற்பகல் 3 மணிக்கு 74.04, மாலை 5 மணிக்கு 87.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாலக்கோடு - 89.96, பென்னாகரம் - 87.28, தருமபுரி - 86.54, பாப்பிரெட்டிப்பட்டி - 87.71, அரூரில் 85 சதவீதம் என்ற வகையில் வாக்குகள் பதிவாகியிருந்தன.

Advertisement

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ. சதீஸ் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமுள்ள 1,596 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 1,530 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி முடிவடைந்தது. மலைக் கிராமங்களில் அமைந்துள்ள சாவடிகள் உள்பட 66 வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவுகள் தொடா்ந்தன.

மாவட்டத்தில் மொத்தம் 90.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாலக்கோடு தொகுதியில் 92.57, பென்னாகரத்தில் 90.71, தருமபுரியில் 89.44, பாப்பிரெட்டிப்பட்டியில் 90.36, அரூரில் 87.72 சதவீதம் என்ற வகையில் வாக்குகள் பதிவாகியுள்ளன என்றாா்.

அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்:

வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா், வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் மையமான செட்டிக்கரை பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுசென்று, தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீலிடப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தருமபுரி அன்னசாகரம் அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.