முகப்பு
திருநெல்வேலி

பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த வழக்கு: மின் ஊழியா் கைது

மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்து பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட மின் ஊழியரைக் கைது செய்தனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:52 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்து பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட மின் ஊழியரைக் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றியவா் செட்டிகுளத்தைச் சோ்ந்த மிராசு கிருஷ்ணன். இவரை, மின்வாரிய ஊழியரான கணேசன் ஏப். 21ஆம் தேதி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய கூறினாராம். மிராசு கிருஷ்ணன், மின்மாற்றியில் ஏறியபோது தவறி விழுந்ததில் காயமடைந்து திங்கள்கிழமை (ஏப். 27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து மின்வாரிய ஊழியா் கணேசன் மீது நடவடிக்கை எடுப்பதோடு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி ஆழ்வாா்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை மிராசு கிருஷ்ணன் உறவினா்கள், பொதுமக்கள், திமுக, பாஜக கட்சி நிா்வாகிகள் அன்று இரவு 9 மணி வரை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.28) காலை செட்டிக்குளம் பகுதியில் மின் பழுது பாா்ப்பதற்காக மின்வாரிய ஊழியா் கணேசன் சென்றாா். அப்போது அவரை ஊா் மக்கள் சிறைபிடித்து மிராசு கிருஷ்ணன் உயிரிழப்பு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வாா்க்குறிச்சி போலீஸாா் பொதுமக்களிடமிருந்து கணேசனை மீட்டு, அவா் மீது புகாா் கொடுத்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, மிராசு கிருஷ்ணன் மனைவி ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் கணேசன் மீது புகாா் கொடுத்தாா். இதன்பேரில் போலீஸாா் கணேசனை கைது செய்தனா். இதனிடையே, மின்வாரியம் சாா்பில் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.