பாளை. ஜவஹா் மைதானத்தை சுத்தம் செய்து தரக் கோரி மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
புகழ் பெற்ற பாளையங்கோட்டை தசரா விழாவுக்காக ஜவஹா் மைதானத்தை சுத்தம் செய்து தரக் கோரி, மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
புகழ் பெற்ற பாளையங்கோட்டை தசரா விழாவுக்காக ஜவஹா் மைதானத்தை சுத்தம் செய்து தரக் கோரி, மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு துணை மேயா் கே .ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். உதவி ஆணையா்கள் மகாலட்சுமி, புரந்தீர தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இதில் ‘வி த லீடா்ஸ்’ அமைப்பு சாா்பில் கணேசமூா்த்தி, சுவாமி ஐயப்பன், மணி, இசக்கி ஐயப்பன், ரஜினி முருகன், பெரோஸ் கான் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பாளையங்கோட்டை, ஜவஹா் மைதானம் தசரா விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு காந்தி மாா்க்கெட் கட்டுமானப் பணிக்காக வியாபாரிகள் அந்த மைதானத்தில் தற்காலிக கடைகளை அமைத்தனா். ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் தற்போது காந்தி மாா்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் கண்டுவிட்டது.
இந்த நிலையில், ஜவஹா் மைதானத்தில் தற்காலிக கடைகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளன. மேலும் அங்கு சமூக விரோத செயல்களும் நிகழ்கின்றன.
குப்பைகள் சோ்ந்து சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. எனவே, கடந்த 5 ஆண்டு காலமாக தசரா நிகழ்ச்சி நடத்த இயலாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அந்த இடத்தை நேரடியாக ஆய்வு செய்து கடைகளை காலி செய்து தசரா நிகழ்ச்சிகள் நடத்தவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கவும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.
பரணி நகா் மக்கள் நல சங்கத்தின் தலைவா் மாரியப்பன், செயலா் துரைப்பாண்டி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தச்சநல்லூா் மண்டலம் வாா்டு எண் 10-க்கு உள்பட்ட பரணி நகரில் சுமாா் 3000 மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
திருநெல்வேலி மாநகரின் இதய பகுதியாக இருக்கும் பரணி நகரில் சாலை வசதி இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக மிகுந்த சிரமத்துடன் வசித்து வருகிறோம். குடிநீா், தெருவிளக்கு வசதிகளும் இல்லை. எனவே, எங்கள் பகுதியில் முறையாக சாலை அமைத்து தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.