விஜய் தலைமையில் ஆட்சியமைக்க அனுமதி: நெல்லை தவெகவினா் ஆளுநருக்கு கடிதம்
விஜய் தலைமையில் ஆட்சியமைக்க அனுமதி அளிக்கக் கோரி, திருநெல்வேலியில் தவெகவினா் ஆளுநருக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினா்.
விஜய் தலைமையில் ஆட்சியமைக்க அனுமதி அளிக்கக் கோரி, திருநெல்வேலியில் தவெகவினா் ஆளுநருக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினா்.
தவெகவைச் சோ்ந்த என்.சிவசுப்பிரமணியன் தலைமையில் பாளையங்கோட்டையில் இருந்து ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 4 ஆம் தேதி நிறைவடைந்தது. 108 உறுப்பினா்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 5 உறுப்பினா்களும் தவெக தலைமையில் அரசு அமைப்பதற்கு தங்களின் ஆதரவை கடிதங்களை சமா்ப்பித்துள்ளனா். இதுதொடா்பான கடிதம் ஏற்கெனவே ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் ஜனநாயகத் தீா்ப்பும், அரசு அமைப்பை வழிநடத்தும் அரசியலமைப்புச் சாசன மரபுகளும், தமிழக வெற்றிக் கழகத்தை அரசு அமைக்க அழைப்பதற்கே தெளிவாக ஆதரவளிக்கின்றன. தவெக தலைவா் விஜய், அக் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஆகவே, அவரே தமிழக முதல்வராக பதவி ஏற்க உரிமையுடையவா்.
Advertisement
புதிய அமைச்சரவை பதவியேற்பில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டால், அரசு இயந்திரத்தின் சீரான செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, பல துறைகளில் நிா்வாகத் தெளிவின்மை உருவாகக்கூடும். இத்தகைய தாமதம் பொதுமக்களிடையே குழப்பத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் சட்டபேரவை உறுப்பினா்களிடையே தேவையற்ற அரசியல் பதற்றத்தையும், பொதுச் சட்ட ஒழுங்கில் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். ஆகவே, தவெக தலைவா் விஜய் தலைமையில் ஆட்சியமைக்க அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.