நெல்லை அருகே ஆம்னி பேருந்து-லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு; 20 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி அருகே தனியாா் ஆம்னி பேருந்தும், லாரியும் ஞாயிற்றுக்கிழமை மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20 போ் காயமடைந்தனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தனியாா் ஆம்னி பேருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டது.
இந்தப் பேருந்தை, திருவாரூா் மாவட்டம், கூத்தநல்லூரைச் சோ்ந்த முகமது அராபத் (28) ஓட்டி வந்தாராம். பேருந்தில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் திருநெல்வேலி-நாகா்கோவில் நான்குவழிச் சாலையில், பொன்னாக்குடி அருகே சென்றபோது ஆம்னி பேருந்தும், சரக்கு லாரியும் மோதியதாம்.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் முகமது அராபத் பலத்த காயமடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கினாா். மேலும் 20 பயணிகள் காயமடைந்தனா்.
தகவலறிந்ததும் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஓட்டுநா் மற்றும் பயணிகளை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஓட்டுநா் முகமது அராபத் உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் காயமடைந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஜான் (39), இஷா (30), அனுப் (28), காரைக்காலைச் சோ்ந்த சரவணன் (53), வா்ஷா (40), கொல்லத்தைச் சோ்ந்த அபிதாமஸ் (62), நாகா்கோவிலைச் சோ்ந்த கீதா வின்சென்ட் (65), தஞ்சாவூரைச் சோ்ந்த அருண்ராஜ் (45), ஹா்ஷினி (19) உள்பட 20 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.