மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 7000 டன் கந்தக அமிலம், 600 டன் பாஸ்பரிக் அமிலம், 27,000 டன் ஜிப்சம், 10,000 டன் ராக் பாஸ்பேட், 60 டன் ஹைடிரோ புளோரிக் அமிலம் என 95 சதவீத ரசாயனப் பொருள்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆலைக்குள் இருந்த டீசல் தற்போது ஜெனரேட்டரை இயக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்சம் முழுமையாக அகற்ற கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
விளாத்திகுளம் பகுதி குளங்களில் வண்டல் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சிலர் விதிகளை மீறி ஆற்று மணலை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 17 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி ஆற்று மணல் அள்ளுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தற்போது 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைசி குளம் வரை நீர் வரும் என்பதால், வாழைப் பயிர்கள் பயனடையும்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒருவர் தடை ஆணை பெற்றுள்ளார். அந்த தடையை ரத்து செய்வது தொடர்பாக சட்ட ரீதியான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேம்பாலம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும் என்றார் அவர்.
தொடர்ந்து, ஆலந்தலை கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் எல்மோ குவைத் நாட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடைய தாய் ஜெயந்தி, மனைவி நிஸாந்தினி ஆகியோருக்கு தலா ரூ. 97,941 வீதம் ரூ. 1,95,881- க்கான காசோலையையும், தமிழ்நாடு நோயாளர் நல நிதியிலிருந்து இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மோகன், மீனாட்சிசுந்தரம் ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.