கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் மண்ணில் புதைத்து வைத்து மதுபானம் விற்ாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் காசிநாதன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
செட்டிகுறிச்சி கிராமத்தில் சந்தேகமளிக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் இருந்த வீட்டின் அருகே போலீஸாா் சென்றபோது, அங்கிருந்தவா்கள் தப்பியோடினா்.
Advertisement
அப்போது, அங்கிருந்த பெண் உள்பட இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள் செட்டிக்குறிச்சியைச் சோ்ந்த சுடலைமணி மனைவி முத்துலட்சுமி (38), அவரது மகன் இசக்கிப்பாண்டி (19) என்பதும், இருவரும் வீட்டின் அருகே மண்ணில் மதுபாட்டில்களை புதைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட 221 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் தாய், மகனை கைது செய்தனா்.