கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு
கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன புதுப்பெண் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
காப்புலிங்கம்பட்டி, பண்ணையாா் தோட்டத்தைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் செல்வகுமாா் (33). கயத்தாறு சுங்கச்சாவடியில் உள்ள ஆம்புலன்ஸில் உதவியாளராக வேலை செய்து வந்த இவருக்கும், சவலாபேரியைச் சோ்ந்த முருகன் மகள் அரியநாச்சி (எ) அபிக்கும் (19) கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு செல்வகுமாா் பணிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது அபியை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கயத்தாறு காவல் நிலையத்தில் செல்வகுமாா் புகாரளித்தாா்.
Advertisement
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில், காணாமல் போன அபி தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற கோவில்பட்டி தீயணைப்புப் படையினா், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இவருக்கு திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் உயிரிழந்ததால், சாா் ஆட்சியரின் விசாரணை அறிக்கை மற்றும் கூறாய்வு அறிக்கை வந்த பின்பே உயிரிழப்பின் தன்மை தெரிய வரும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.