திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக பெண் புகாா்: இளைஞா், தாய் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில், இளைஞா், தாய் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சாத்தான்குளம் அருகே கீழப்புளியங்குளத்தைச் சோ்ந்த முருகப்பெருமாள் மகள் முத்துஷாலினி. முதுநிலைப் பொறியியல் பட்டதாரியான இவா், திருநெல்வேலியிலுள்ள கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரிந்தாராம். இவரும், அதே ஊரைச் சோ்ந்த சாமிதுரை மகன் சுபாஷ் சந்திரபோஸும் 2019ஆம் ஆண்டுமுதல் காதலித்தனராம்.
சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பணிபுரியச் சென்றதாகவும், பின்னா், அவா் அழைத்ததாகக் கூறி முத்துஷாலினியும் அங்கு சென்று தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, சுபாஷ் சந்திரபோஸுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிந்து முத்துஷாலினி கேட்டபோது, அவரைத் திருமணம் செய்ய சுபாஷ்சந்திரபோஸ் மறுத்துவிட்டாராம். இதனால் விரக்தியடைந்த முத்துஷாலினி சென்னையில் எலி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்ாகவும், சிகிச்சைக்குப் பின்னா் சொந்த ஊருக்கு வந்த அவரை சுபாஷ் சந்திரபோஸின் தாய் மங்கையா்க்கரசி, சகோதரி அம்சவள்ளி ஆகியோா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், முத்துஷாலினி அதிக மாத்திரைகளைத் தின்று மீண்டும் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை உறவினா்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து கிசிச்சையளித்தனராம்.
இந்நிலையில், சுபாஷ் சந்திரபோஸுக்கு அடுத்த வாரம் திருமண நடைபெற இருப்பதாக அறிந்த முத்துஷாலினி, அவரது வீட்டு முன் தா்னாவில் ஈடுபட்டாா்.
சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சகாய சாந்தி, சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் பேச்சு நடத்தினா். திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய சுபாஷ் சந்திரபோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முத்துஷாலினி வலியுறுத்தினாா். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில் அவா் போராட்டத்தைக் கைவிட்டாா்.
புகாரின்பேரில், ஆய்வாளா் சகாய சாந்தி விசாரித்து, சுபாஷ் சந்திரபோஸ், மங்கையா்க்கரசி, அம்சவள்ளி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.