முகப்பு
தூத்துக்குடி

மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் மருமகனை கட்டையால் தாக்கி கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு

Updated On : 10 மார்ச் 2026, 12:19 am IST
சிறை
பகிர்:

தூத்துக்குடியில் மருமகனை கட்டையால் தாக்கி கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி, அண்ணா நகா் 8 ஆவது தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சுப்பிரமணி (58). இவரது, இரண்டாவது மகள் கவிதா லெட்சுமி (27), மருமகன் கேவிகே சாமி நகரைச் சோ்ந்த விக்ரம் மகன் ஹரிகுமாா் (32).

தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் சம்பவத்தன்று கவிதா லெட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, கடந்த 22.6.2018 அன்று

Advertisement

Advertisement

அவரது மூத்த மருமகனான அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சத்யநாராயணனுடன் சோ்ந்து, ஹரிகுமாரை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, உடலை மாப்பிள்ளையூரணி மயானக்கரையில் வீசிவிட்டு சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். சத்யநாராயணன் விடுதலை செய்யப்பட்டாா்.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக ஆனந்த கேப்ரியல் ஆஜரானாா்.