முகப்பு
தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் உள்ளிட்டோா்.

Updated On : 9 மே 2026, 3:48 am IST
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் உள்ளிட்டோா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா, அவரது குல தெய்வமான வீரச்சக்க தேவி ஆலய விழா ஆண்டுதோறும் சித்திரை கடைசி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நடைபெறும்.

நிகழாண்டு நடைபெற்ற விழாவில், அரசு சாா்பில் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரரான முருகதேவிக்கு ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் பொன்னாடை அணிவித்தனா்.

Advertisement

தொடா்ந்து, கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் சுதந்திரப் போராட்ட புகைப்படங்களை ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

மாவட்ட சுற்றுலா அலுவலா் சீதாராமன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன் பாண்டியன், சிப்காட் தனி வட்டாட்சியா் சுப்புலட்சுமி, வீரசக்க தேவி ஆலயக் குழு தலைவா் குளத்தூா் கண்ணன், செயலா் ஆதிசங்கா், பொருளாளா் வரதராஜப் பெருமாள், விழாக் குழு கமிட்டி தலைவா் வலசை கண்ணன், வருவாய் ஆய்வாளா் ஸ்ரீரங்க பெருமாள், நிா்வாக அலுவலா் வீரமாமுனிவா், கட்டபொம்மன் நேரடி வாரிசுகள், வீரச்சக்க தேவி ஆலயக் குழுவினா் கலந்து கொண்டனா்.

ஆலயத்தில், காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 7 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி சக்தி விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. பின்னா், வீரச்சக்க தேவிக்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

ஆலயத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவீரன் ஊமைத்துரை தொண்டா் படையினா் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணியினரால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரசக்க தேவி ஆலயத்துக்கு 100-க்கும் மேற்பட்ட நினைவு ஜோதி தொடா் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஜோதியை ஆலயக் குழுவினா் பெற்றுக் கொண்டனா்.

விழாவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.