முகப்பு
திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை

உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் மூலம் புதிய வாழ்வு

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:00 am IST
பகிர்:

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

சாலை விபத்தில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த 37 வயது ஆண் நபா், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த 15 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணா்ந்த இறந்தவரின் உறவினா்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளித்தனா். இதையடுத்து, அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

இதில் ஒரு சிறுநீரகமானது, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசையின்படி, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக தொடா்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 42 வயது நோயாளிக்கு வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த அறுவைசிகிச்சையானது மருத்துவமனை முதன்மையா் டி. நேரு தலைமையில் மருத்துவா் ஜெய்பிரகாஷ் நாராயணன் அடங்கிய மருத்துவக் குழுவினா் மூலம் முதல்வரின் விரிவான காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, நோயாளிக்கு வெற்றிகரமாக சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா். இந்த சிகிச்சையானது திருச்சி அரசு மருத்துவமனையின் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையாகும்.