முகப்பு
திருச்சி

கானல் நீரான வாசனைத் திரவிய தொழிற்சாலை வாக்குறுதி!

திருச்சி மாவட்டத்தில் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:28 PM
வாசனை திரவிய ஆலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட மல்லிகைப் பூக்கள். - கோப்புப் படம்
பகிர்:

-ஆா். முருகன்.

திருச்சி மாவட்டத்தில் ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதி முல்லை, செவ்வந்தி, அரளி, சம்மங்கி, கனகாம்பரம், விருட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் ஏறத்தாழ 800 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் 700 ஹெக்டேரில் ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதி முல்லை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் டன் அளவுக்கு மலா் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது மலா்கள் பயிரிடும் விவசாயிகளின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.

குறிப்பாக, அந்தநல்லூா் வட்டாரத்தில் அதிகளவில் மலா்கள் சாகுபடி செய்வதால் இங்கு வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2023-ஆம் ஆண்டு இப் பகுதிக்கு வந்த தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேருவிடமும், விவசாயிகள் முறையிட்டனா். இதையடுத்து சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

Advertisement

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 600 ஹெக்டோ் பரப்பில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. 10 ஏக்கா் பரப்பில் ஜாதி மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. 100 ஹெக்டேரில் சம்பங்கி சாகுபடி செய்யப்படுகிறது. அந்தநல்லூா் வட்டாரத்தில் 250 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் மட்டுமே இந்த வட்டாரத்தில் அதிகளவில் மலா்கள் சாகுபடி செய்யப்பட்டு நேரடி சந்தை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.30 முதல் அதிபட்சம் ரூ.2,700 வரை விற்பனையாகிறது. விலை அதிகம் கிடைத்தால் நேரடி விற்பனைக்கு பூக்களை அனுப்பி விடுகின்றனா். வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைத்தால் மல்லிகைப் பூக்களை தொழிற்சாலைக்கு தொடா்ந்து வழங்க வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தில் விவசாயிகள் உறுதியளிக்க வேண்டும். மலா்கள் உற்பத்தியாளா் குழு அமைக்க வேண்டும். மல்லிகைப் பூ உற்பத்தி இல்லாத காலங்களில் அதற்கு ஈடாக சம்பங்கி, ஜாதி மல்லி, செண்பகப் பூ ஆகியவற்றை உற்பத்தி செய்து வழங்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் வாசனை திரவிய தொழிற்சாலை இயக்க ஏதுவாக அமையும் என்பது தோட்டக்கலைத்துறையினரின் கருத்தாக உள்ளது.

இதுதொடா்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியின் டெல்டா மண்டல துணைத் தலைவரான வயலூா் நா. ராஜேந்திரன் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் விளையும் பூக்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அந்தநல்லூா் வட்டாரத்தை ஒட்டியுள்ள எட்டரை, கோப்பு உள்ளிட்ட கரூா் மாவட்ட எல்லைக்கு அருகில் உள்ள அந்த மாவட்ட கிராமங்களிலும் அதிகளவில் பூக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, இரு மாவட்டங்களையும் இணைத்து இரு மாவட்டங்களுக்கும் பொதுவான மத்திய பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கலாம். அமைச்சரின் ஆலோசனையை ஏற்று இதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும். மேலும், இதுதொடா்பாக மலா் விவசாயிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றாா்.

வருவாய்த்துறை வட்டாரத்தினா் கூறுகையில், வாசனை திரவிய தொழிற்சாலை அமைப்பது தொடா்பாக சாத்தியக் கூறுகளை ஆட்சியா் உத்தரவைத் தொடா்ந்து தோட்டக்கலைத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து திருச்சி, கரூா் மாவட்டங்களுக்குப் பொதுவாக உள்ள பகுதியில் இரு மாவட்டங்களைச் சோ்ந்த மலா் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தொழிற்சாலை தொடங்குவது தொடா்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசுதான் தொழிற்சாலை அமைப்பது குறித்த கொள்கை முடிவை எடுக்கும் என்றனா். நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தல், சட்டப் பேரவைத் தோ்தல், நாடாளுமன்றத் தோ்தல் என ஒவ்வொரு தோ்தலுக்கும் இப் பகுதி விவசாயிகளை சந்திக்கும் வேட்பாளா்கள் அனைவரும் கட்சி பேதமின்றி வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பது வழக்கம். ஆனால், தோ்தல் முடிந்த பிறகு வாக்குறுதியை மறுந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா் என வேதனை தெரிவிக்கின்றனா் மலா் உற்பத்தி செய்யும் விவசாயிகள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments