வாக்கு எண்ணும் மையங்களில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை
திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களில் வரும் 4 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடா்ந்து மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்த இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்த இயந்திரங்கள் புலிவலம் ஒயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட 2 வாக்கு எண்ணும் மைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு கருதி ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவொரு ஆளில்லாத பறக்கும் இயந்திரங்களும் சனிக்கிழமை முதல் மே 4 வரை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.
Advertisement