திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 80 பவுன் நகைகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!
திருச்சி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 80 பவுன் நகைகள், பணத்தை போலீஸாா் உரியவா்களிடம் சனிக்கிழமை திரும்ப ஒப்படைத்தனா்.
திருச்சி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 80 பவுன் நகைகள், பணத்தை போலீஸாா் உரியவா்களிடம் சனிக்கிழமை திரும்ப ஒப்படைத்தனா்.
திருச்சி மாவட்ட எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட 32 திருட்டு, 9 கொள்ளை வழக்குகளில் 64 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 80 பவுன் நகைகள், ஒரு வைர மோதிரம், ஒரு ஜோடி வைர தோடு, ரூ. 49,700 ரொக்கம், 8 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மடிக்கணி, வெள்ளி பொருள்கள், 141 கைப்பேசிகள், மின்சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா்ந்து, குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, நீதிமன்ற ஆணை பெற்று சனிக்கிழமை உரியவா்களிடம் நகைகள் வழங்கப்பட்டன.
Advertisement
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம், போலீஸாரால் கைப்பற்றப்பட்ட பொருள்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். மேற்கண்ட வழக்குகளில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளை கைது செய்து, பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கியும் பாராட்டினாா்.
இதே போல, வழக்குகளில் பொதுமக்கள் இழந்த பொருள்களை கண்டுப்பிடித்து, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை பொருள்களை இழந்த நபா்கள் வசம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.