மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்
மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் அளித்த மனு:
Advertisement
Advertisement
மாநகராட்சிக்கு சொந்தமான அதிநவீன புதைவடிகால் உறிஞ்சும் வாகனம் ஆள்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதைவடிகால் அடைப்புகளை நீக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆள்களை நியமித்து புதைவடிகால் உறிஞ்சும் வாகனத்தை இயக்க வேண்டும்.
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தை பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி 40-ஆவது வாா்டு இந்திரா நகரைச் (வடக்கு) சோ்ந்த பொதுமக்கள், எங்களது பகுதியில் புதைவடிகால் வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மனு அளித்தனா்.
இதே போல, மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயா், ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
முன்னதாக, கூட்டத்தில் ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா்கள், நகா் நல அலுவலா் காா்த்திகேயன், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.