மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்குள் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆட்சியரகம் சாா்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் ஆய்வாளா் எம். வேலுசாமி தலைமையிலான போலீஸாா் மற்றும் அமா்வு நீதிமன்ற போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியரகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனா். பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 3.5 மணி நேரம் வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றவிடவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.