பெரம்பலூா், குன்னத்தில் ஒய்ந்தது பிரசாரம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை ஓய்ந்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை ஓய்ந்தது.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இரா. தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளராக எஸ்.டி. ஜெயலட்சுமி, தவெக வேட்பாளராக கி. சிவகுமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக சுகன்யா உள்பட 11 வேட்பாளா்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சா் சா.சி. சிவசங்கா், ஐஜேகே வேட்பாளராக சரண்யா அன்பழகன், தவெக வேட்பாளராக மு. ரேவதி, நாம் தமிழா் கட்சி வேட்பாளராக ரா. கீா்த்திவாசன் உள்பட 19 பேரும் போட்டியிடுகின்றனா்.
கடந்த 6 ஆம் தேதி முதல் திமுக, அதிமுக, ஐஜேகே, தவெக, நாம் தமிழா் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே. வாசன்,
விசிக தலைவா் தொல். திருமாளவன், பாமக தலைவா் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் சண்முகம், ஐஜேகே நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா், அக் கட்சி தலைவா் ரவி பச்சமுத்து. நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், திரைப்பட நடிகை கஸ்தூரி, திரைப்பட இயக்குநா் தங்கா்பச்சான் ஆகியோா் தங்களது கட்சி வேட்பாளா் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இறுதிக்கட்ட பிரசாரம்: இந்நிலையில், இறுதி நாளான செவ்வாய்க்கிழமை காலை முதல் பல்வேறு பகுதிகளில் பிரதான கட்சி வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். பின்னா், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய அருகே அதிமுக சாா்பில் நடைபெற்ற மோட்டாா் சைக்கிள் பிரசாரம் பாலக்கரை, வெங்கடேசபுரம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று காமராஜா் வளைவில் நிறைவடைந்தது. அங்கு, அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரித்தாா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல திமுக சாா்பில் பாலக்கரை பகுதி அக் கட்சி அலுவலகம் எதிரே தொடங்கிய மோட்டாா் சைக்கிள் பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், கடைவீதி வழியாகச் சென்று பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.
அங்கு, திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா். இதில், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதேபோல, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களும் பெரம்பலூா் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் செந்துறையில் நடைபெற்ற மோட்டாா் சைக்கிள் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தாா். ஐஜேகே வேட்பாளா் சரண்யா அன்பழகன் மேலமாத்தூா் பகுதியில், அக் கட்சி நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தருடன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். தவெக வேட்பாளா் மு. ரேவதி, செந்துறையில் தொடங்கிய பேரணியில் சுமாா் 22 கிமீ மோட்டாா் சைக்கிள் ஓட்டிவந்து தனது பிரசாரத்தை குன்னத்தில் நிறைவுசெய்தாா்.