கிசான் சம்மான் நிதியுதவி திட்டம் தொடக்கம்: 125 விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் வழங்கல்
புதுக்கோ ட்டை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக
புதுக்கோ ட்டை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 125 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் முதல் தவணை நிதி ரூ. 2.50 லட்சம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ள விவசாயிகள் எவ்வித இடர்பாடுகளுமின்றி விவசாய இடுபொருள்களை வாங்கி விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் கிசான் சம்மான் நிதித் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தொடங்கி வைக்கப்பட்ட அதேநாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 125 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் தவணை நிதியான ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 2.50 லட்சம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ . ராமசாமி இந்த நிதியை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் இரா. சின்னதம்பி, வேளாண் இணை இயக்குநர் சுப்பையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
அறந்தாங்கி: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.கார்த்திகேயாயினி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எம்.பிரேமாவதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.சொர்ணபாரதி பேசினார். அறந்தாங்கி வேளாண்மை அலுவலர் கே.இளையராஜா வரவேற்றார். துணை வேளாண்மை அலுவலர் எஸ்.பாண்டி முருகன் நன்றி கூறினார்.
பதிவு செய்துகொள்ள சிறப்பு முகாம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் விவசாயிகள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் பிப். 25ஆம் தேதி முதல் பிப். 27ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.இம்மூன்று நாட்களும் அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் ஆகியவற்றுடன் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்.