கலாசாரம் மிக்க பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்: வெங்கய்ய நாயுடு மகள் பேட்டி
பாரம்பரிய, கலாசாரம் மிக்க தென்னிந்திய பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபா வெங்கட்.
பாரம்பரிய, கலாசாரம் மிக்க தென்னிந்திய பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபா வெங்கட்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் மனைவி உஷா, அவரது மகள் தீபா வெங்கட், பேரன் விஷ்ணு, பேத்தி சுஷ்மா மற்றும் உறவினர்கள் ஆகியோர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்கள், அங்குள்ள ஓவியங்கள், கட்டட அமைப்புகள் உள்ளிட்டவற்றை சுமார் 2 மணி நேரம் கண்டு ரசித்தனர்.
இதைத் தொடர்ந்து வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபாவெங்கட் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சை பெரிய கோயிலின் கட்டட கலை அமைப்பை தமிழில் அதி அற்புதம் என்று கூறினால் தகும். நிறைய செலவு செய்து பலர், வரலாற்று ஆவணங்கள் இல்லாத வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றனர். நிறைந்த பாரம்பரிய வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற சுற்றுலாத்தலங்கள் அதிகளவில் நமது நாட்டிலேயே உள்ளன.
தமிழகத்தை ஆண்ட சோழர்கள், நாயக்கர்கள் கால ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓவியங்கள், கட்டடக் கலை அமைப்பைக் கொண்ட தஞ்சை பெரிய கோயில் வியப்பில் ஆழ்த்துகிறது. எவ்வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு வியத்தகு கட்டடத்தை கட்டி, நமது நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை காத்துள்ளது சாதாரண விஷயமல்ல. இது இந்தியர்களால் மட்டுமே முடியும்.
தொன்மை வாய்ந்த நமது நாட்டின் சிலைகள் இந்திய திருநாட்டிற்கே சொந்தம். தனி ஒருவருக்கு சொந்தமானதல்ல. எனவே, சிலைகளை பாதுகாப்பது நமது கடமை.
நமது தொன்மை சின்னங்களான சிலைகள் யாரிடமாவது கிடைத்தால், அவற்றை தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
கலாசார பெருமை மிக்க சபரிமலைக்கு குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் செல்வதில்லை. பண்டைய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பின்பற்றும் நான் உள்பட தென்னிந்திய பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றார் தீபா வெங்கட்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.