வாகனச் சோதனை: விதிமீறிய 7 ஆட்டோக்கள் பறிமுதல்
பாபநாசம் பகுதியில் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் சனிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டார்.
பாபநாசம் பகுதியில் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் சனிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டார்.
பாபநாசம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும்,
கும்பகோணம்-தஞ்சாவூர் பிரதான சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும் ஆட்சியருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
ஆட்சியர் உத்தரவின்பேரில், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் கு. வெங்கிடுசாமி, பாபநாசம் வட்டார பகுதிகளான பாபநாசம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, கபிஸ்தலம் பகுதியில் தகுதி சான்றிதழ் மற்றும் முறையானஆவணங்களின்றி இயக்கப்பட்ட 5 பயணிகள் ஆட்டோக்கள், இரண்டு சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து, பண்டாரவாடை பகுதியில் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில் அதிவேகத்துடன் அதிக சப்தம் எழுப்பியபடி வந்த இரண்டு தனியார் பேருந்துகளை மறித்து சோதனையிட்டு, பேருந்துகளில் பயன்படுத்திய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தார். மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நான்கு பேருக்கு அபராதம் விதித்தார்.
ஆய்வின்போது, பாபநாசம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கலைசெல்வன், ஊர்க்காவல் படை கோபிநாதன், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கௌதமன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.