முகப்பு
தஞ்சாவூர்

பயிர்சேத கணக்கெடுப்புப் பணிக்கு முறையான குழு அமைக்க வேண்டும்

இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேதக் கணக்கெடுப்புப் பணிக்கு முறையான குழு அமைக்க வேண்டும் என

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:04 am IST
பகிர்:

இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேதக் கணக்கெடுப்புப் பணிக்கு முறையான குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் : 
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாரத்துக்கு 6 உதவி வேளாண்மை அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டுக்கு மாறாக 2 வருவாய் கிராமத்துக்கு ஒரு உதவி வேளாண்மை அலுவலர் பணி இடமும், வட்டாரத்துக்குக் கூடுதலாக ஒரு உதவி அலுவலர் பணியிடமும் ஒதுக்க வேண்டும்.  உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு மறுக்கப்பட்ட ஊதிய மாற்றத்தை அரசு வழங்க வேண்டும். 
கஜா புயலின்போது மாவட்ட மற்றும் வெளி மாவட்ட  ஊழியர்களைக் கொண்டு பயிர் சேதக் கணக்கெடுப்பு பணி சரியான திட்டமிடல் இல்லாமலும், போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமலும் மேற்கொள்ளப்பட்டதால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியதுடன், உடநலமும் பாதிக்கப்பட்டது.
 எனவே இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேத கணக்கெடுப்புப் பணிக்கு உதவி வேளாண் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள், கிராம உதவியாளர்களைக் கொண்டு கணக்கெடுப்புக் குழுவை ஏற்படுத்தி, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மு. கணேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் இரா. அருள், பொதுச் செயலர் வெங்கடேசன், பொருளாளர் சிவந்திராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.