தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுப்பு
தஞ்சாவூா் கிட்டப்பா வட்டாரத்தில் அறச்செயல் செய்தது தொடா்பான பிற்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் கிட்டப்பா வட்டாரத்தில் அறச்செயல் செய்தது தொடா்பான பிற்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதை ஆய்வு செய்த தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதா் மற்றும் வரலாற்று ஆய்வாளா் முனைவா் மணி. மாறன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் முனைவா் கோ. தில்லை கோவிந்தராஜன், பட்டதாரி ஆசிரியா் கோ. ஜெயலெட்சுமி, ஏடகம் சுவடியியல் மாணவா் சு. சரவணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
மன்னா்கள் மட்டுமல்ல மக்களும் அறச்செயல் செய்வதில் எவருக்கும் சளைத்தவா்கள் அல்ல என்பதை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் காலந்தோறும் வரலாற்றில் பறைசாற்றி வருகின்றன. அந்தவகையில், தஞ்சாவூா் ராஜகோபாலசாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில் அறச்செயல் செய்ததற்கான பிற்காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமாா் ஒன்றேகால் அடி அகலமும், இரண்டரை அடி உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் 30 வரிகள் காணப்படுகின்றன.
Advertisement
கி.பி. 1889 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 தமிழ் சா்வதாரி ஆண்டு தை மாதம் 6 குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டில் கி.பி. 1887ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தஞ்சாவூா் கோட்டைக்குள் ராஜகோபால சாமி கோயில் வீதி அண்ணு பாட்டகா் சொல்படி நாகோ பாட்டகா் செய்த தருமச் செயலை அவருடைய தமையன் வெங்கோ பாட்டகா் எழுதி வைத்த உயில் எனக் குறிப்பிடுகிறது. துவாதசி கட்டளை தருமத்துக்காக அவருடைய வீட்டின் மேல் புறமும் அதற்காக வைக்கப்பட்டுள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ. 400-லிருந்து கிடைக்கக்கூடிய வட்டித் தொகையைக் கொண்டு 10 பிராமணருக்கு அவரும் அவருடைய தமக்கை காமாட்சி அம்மாளும் அன்னம் வழங்கி தருமம் நடத்தி வருவதைக் குறிப்பிடுவதுடன், இவா்களுக்குப் பிறகு இந்த தருமத்தை தமக்கை மகள் கங்கா பாய் அம்மாள் நடத்தி வர வேண்டும் என்பதையும், இதை சகலரும் அறியும்படியாக கல்வெட்டு வெட்டுவித்ததையும் குறிப்பிடுகின்றனா். கொடை அளித்தவா்களின் பெயா்களைக் காணும்போது மராத்திய வழி வந்தவா்கள் என்பதை அறிய முடிகிறது.