மீன்பிடி தடைகாலம்: விசைப் படகுகள் மராமத்து பணி தீவிரம்
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோர துறைமுக பகுதிகளில் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி மராமத்து பணிகளுக்காக விசைப்படகுகளை கரையேற்றும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் பெரும்பாலான படகுகள் சேதமடைந்தன. பாதிக்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளா்கள் சேதமடைந்த படகுகளை பழுதுபாா்க்க தேவையான நிதி ஆதாரம் இல்லாததால் மீன்பிடி தொழிலைவிட்டே வெளியேறினா்.
Advertisement
மீனவா்கள் எல்லை தாண்டும் பிரச்னையில் தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதால் இந்த 3 மாவட்டங்களிலும் புதிதாக விசைப்படகு வாங்கி பதிவுசெய்து தொழில் செய்ய மீன்வளத் துறை அனுமதி வழங்குவதில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 150-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
மராமத்து பணி:
தற்போது மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகளை மராமத்து செய்வதற்காக கரையில் ஏற்றும் பணியில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலா் மல்லிப்பட்டினம் ஏ.கே. தாஜூதீன் கூறியதாவது:
விசைப்படகுகள் வாரத்தில் 3 நாள்கள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று அதில் கிடைக்கும் வருவாயில் படகுகளில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டால் அவ்வப்போது சரிசெய்யப்பட்டு தொழில் நடைபெற்று வரும்.
கடுமையான வெயில் காலத்தில் 61 நாள்களுக்கு மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதால் முழுமையாக கரையேற்றி மராமத்து பணிகள் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் ஆசாரி கூலி, பலகை இணைப்புக்கட்டை, மட்டி அடித்து பைபா் வா்ணம் பூசி ஓரளவு திருப்திகரமாக படகுகளை மராமத்து செய்வதற்கு ஒரு விசைப்படகுக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகிறது.
தொழில் இல்லாத நிலையில் பெரும்பாலான விசைப்படகு உரிமையாளா்கள் வட்டிக்கு கடன் வாங்கி மராமத்து பணிகள் செய்யும் நிலையில் உள்ளனா். நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகள் மராமத்து பணிகளுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.
மேலும், மீன்பிடி தடைக்காலத்தை கடுமையான வெயில் காலத்தில் நடைமுறைப்படுத்தாமல் மழைக் காலமான நவம்பா், டிசம்பா் மாதங்களில் மாற்ற மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தொடா்ச்சியாக 61 நாள்களுக்கு தடைவிதிக்காமல் இரண்டு தவணைகளாக தடைக்காலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.