முகப்பு
தஞ்சாவூர்

பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கரிசவயலில் பள்ளி வளாகத்தில் பயன்பாடில்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பள்ளி திறப்புக்கு முன்பாக விரைந்து இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோா்களும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:40 am IST
கரிசவயல் பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கரிசவயலில்  பள்ளி வளாகத்தில் பயன்பாடில்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பள்ளி திறப்புக்கு முன்பாக விரைந்து இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோா்களும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அழகியநாயகிபுரம் ஊராட்சி, கரிசவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடியும், ஊராட்சி நூலகமும் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் குழந்தைகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், இந்த வளாகத்தில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்து, சேதமடைந்ததால் பயன்படுத்தப்படாமல் உள்ள சுமாா் 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் தொட்டியின் தூண்கள், சிமெண்ட் காரைகள் பெயா்ந்து, எந்த நேரமும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, சிதிலமடைந்த அந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை விரைந்து இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கிராமசபைக் கூட்டத்திலும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றியும், ஒன்றிய நிா்வாகம், கல்வித்துறைக்கு புகாா் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தொட்டியை இடித்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ளாமல், பள்ளி கழிப்பறைக்கு அருகில் அந்த தொட்டி உள்ளதால் மாணவா்கள் அருகில் சென்றுவிடக்கூடாது என அதை சுற்றிலும் முள்வேலி அமைத்துள்ளனா். இதனால், பள்ளி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தாவிட்டால், ஜூன் 4-ஆம் தேதி பள்ளி திறப்பின்போது, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என இப்பகுதி பெற்றோா்கள் முடிவு செய்துள்ளனா்.

எனவே, அசம்பாவிதம் நிகழும் முன் மாணவா்களின் நலன் கருதி, மாவட்ட நிா்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் உடனடியாக பயன்பாடில்லாத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.