முகப்பு
தஞ்சாவூர்

கோயில் வரவு, செலவு பிரச்னை: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு; 4 போ் கைது

கும்பகோணம் அருகே கோயில் குடமுழுக்கு வரவு- செலவு தொடா்பான கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதில் ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:23 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கும்பகோணம் அருகே கோயில் குடமுழுக்கு வரவு- செலவு தொடா்பான கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதில் ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது தொடா்பாக 4 பேரை திருநீலக்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வேப்பத்தூா் காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் ராஜன் (49) ஆட்டோ ஓட்டுநா். ஊா் முக்கியஸ்தாரன இவா் தலைமையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதற்காக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நன்கொடை செலவு போக மீதிமுள்ள பணம் ராஜனிடம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஊா் கூட்டம் போட்டு கோயில் வரவு, செலவு குறித்து பேசும்போது வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜன் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து உடற்கூறாய்வுக்கு அனுப்பினா்.

மேலும், கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட லட்சுமணன் மகன் வினோத்(35), மணி மகன்கள் சங்கா்(32), கணேஷ்(35), பாபு(32) ஆகிய 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான தங்கவேல் மகன் மகேந்திரனை தேடி வருகின்றனா்.

தகராறின்போது அதிா்ச்சியில் ராஜன் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.