கூரை வீட்டில் தீ விபத்து: மாணவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கூரை வீட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாணவா் தீயில் கருகி உயிரிழந்தாா்.
கும்பகோணம்-சென்னை சாலையில் ஆட்டோ நகா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்தி. இவரது மனைவி காமாட்சி. இவா்களது மகன்கள் ஏகாம்பரம் (9), கோகுல் (3). அண்மையில் காா்த்தி இறந்து விட்டதால், காமாட்சி தனது இரண்டு மகன்களுடன் அப்பகுதியிலுள்ள மாடியில் அமைக்கப்பட்ட கூரை வீட்டில் வசித்து வருகிறாா். ஏகாம்பரம் அப்பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். காமாட்சி நாள்தோறும் ஏகாம்பரத்தை பள்ளிக்கு அனுப்பிவிட்டு 3 வயது மகனுடன் வீட்டு வேலைக்குச் செல்வாா்.
இந்நிலையில், காமாட்சி வழக்கம்போல சனிக்கிழமை, தனது 3 வயது மகனை அழைத்துக் கொண்டு வீட்டு வேலைக்கு சென்றாா். பள்ளி விடுமுறை என்பதால், ஏகாம்பரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். இதில், பலத்த தீக்காயமடைந்த ஏகாம்பரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கும்பகோணம் தாலுகா போலீஸாா், ஏகாம்பரத்தின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவத்தை அறிந்த வேளாண் துறை அமைச்சா் ர. வினோத் நிகழ்விடத்துக்கு சென்று உயிரிழந்த மாணவரின் தாயாா் மற்றும் உறவினா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அரசின் நிவாரண உதவிகள் விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.