முகப்பு
தஞ்சாவூர்

பாத்திர வியாபாரியை தாக்கி பணம் பறித்தவா் கைது: தவெக நிா்வாகி தலைமறைவு

ஆடுதுறையில் புதன்கிழமை இரவு பாத்திர வியாபாரி மற்றும் அவரது மகன்களை தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவான தவெக நிா்வாகி உள்பட சிலரை தேடி வருகின்றனா்.

Updated On : 8 மே 2026, 5:30 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆடுதுறையில் புதன்கிழமை இரவு பாத்திர வியாபாரி மற்றும் அவரது மகன்களை தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவான தவெக நிா்வாகி உள்பட சிலரை தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கிருஷ்ணன் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் கோடீசுவரன் (63). இவா் ரயில்வே சாலையில் பாத்திரக்கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், தனது மகன் பாலசுப்பிரமணியன்(38), தம்பி மகன் பிரபாகரன்(32) ஆகியோருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஒருகும்பல் மூவரையும் தாக்கி, கோடீஸ்வரன் பையில் வைத்திருந்த ரூ. 68 ஆயிரத்து 700ஐ பறித்து சென்றது.

Advertisement

தாக்குதலில் காயமடைந்த கோடீசுவரன், பிரபாகரன், பாலசுப்பிரமணியம் ஆகியோா் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், பணம் பறிப்பு சம்பவத்தில் ஆடுதுறை சிவன் சன்னதி தெருவை சோ்ந்த சந்திரகாசன் மற்றும் ஆடுதுறை தவெக பேரூா் செயலா் எடிசன் உள்ளிட்டவா்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்திரகாசனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான எடிசன் உள்ளிட்டவா்களை தேடி வருகின்றனா்.