காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சி ஓயாமரி மயானத்தில் விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி ஓயாமரி மயானத்தில் சடலங்கள் எரிக்கப்படும் பகுதியில் சடலம் போலப் படுத்து நூதனப்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி ஓயாமரி மயானத்தில் சடலங்கள் எரிக்கப்படும் பகுதியில் சடலம் போலப் படுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 14 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், திருச்சி காவிரிஆற்றில் மணலுக்குள் புதைந்து போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் வழக்குரைஞர் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், சங்கத்தின் பிரசாரக்குழுத் தலைவர் செல்லப்பெருமாள், அரியலூர் மாவட்டத் தலைவர் ஆண்டவர், நாகை மாவட்டத் தலைவர் தாமோதரன், லால்குடி ஒன்றியச் செயலர் ஜான் மெல்கியோராஜ் மற்றும் சங்க விவசாயிகள் திருச்சி ஓயாமரி மயானத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தனர்.
அவர்கள் அனைவரும் கோவணம் அணிந்து கொண்டு சடலத்துக்கு அணிவிக்கும் மாலையை அணிந்து கொண்டு சடலம் எரிக்கப்படும் பகுதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 45 நிமிஷங்களுக்கும் மேலாக கோஷமிட்டபடி நடைபெற்ற இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த கோட்டை காவல் உதவி ஆணையர் பெரியய்யா தலைமையிலான போலீஸார் மயானத்துக்குச் சென்று போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளை வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் போராட்டம் நடத்திய 11 பேர் உள்பட 14 விவசாயிகளைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில் விவசாயிகள் நிச்சயம் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதையும், விவசாயிகள் எல்லாம் பிணமாகிவிட்டார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில்தான் இந்த போராட்டத்தை நடத்தினோம். இனிமேலும் காலம் தாழ்த்தாமல் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தில்லியில் பிரதமர் இல்லம் முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்துவோம் என்றார் பொ. அய்யாக்கண்ணு.