முகப்பு
திருச்சி

அலைவரிசை கணக்கீடுகளை கண்டறியும் வரைபட "கேக்': என்ஐடி மாணவர்கள் தயாரிப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) மின்னணுப் பொறியியல் முதுகலை பயிலும் மாணவர்கள்

Updated On : 25 டிசம்பர் 2018, 9:50 am IST
பகிர்:

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) மின்னணுப் பொறியியல் முதுகலை பயிலும் மாணவர்கள், அலைவரிசை கணக்கீடுகளை கண்டறிவதற்கான வரைபடத்துடன் கூடிய கேக் தயாரித்துள்ளனர். இவர்கள் உலகிலேயே முதன்முறையாக தொழில்நுட்ப அளவீடுகளுடன் ஸ்மித் சார்ட் கேக் வடிவமைத்த பெருமையையும் பெற்றுள்ளனர்.
1938இல் விஞ்ஞானி ஸ்மித் என்பவரால் இந்த வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டே நுண்ணலை பொறியியலில் பல தத்துவங்களையும், ஆன்டெனா வடிவமைப்பு கூறுகள், 2ஜி, 3ஜி, 4ஜி உள்ளிட்ட அலைவரிசைகளிலன் தகவல் தொடர்பு தத்துவங்களை கணினி முறையில் சில விநாடிகளில் கணிக்க முடியும்.
கம்பியில்லா தகவல்தொடர்புகள் மற்றும் பிற நுண்ணலை தொடர்புகளில் இந்த வரைபடம் மிகவும் பயனுள்ளதாக அமையும். நுண்ணலை ஒருங்கிணைந்த சர்க்யூட் கூறுகளையும் வடிவமைக்க முடியும். இந்த வரைபடத்தை பயன்படுத்தாத மின்னியல் பொறியாளர்களே இல்லை எனவும் கூற முடியும். 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரைபடத்தை கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பயன்படுத்தும் கேக்கில் இடம்பெறச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திள்ளனர் என்ஐடி மாணவர்கள்.
பேராசிரியர் எஸ். ராகவன் வழிகாட்டுதலுடன், மின்னணுப் பொறியியல் முதுகலை முதலாமாண்டு மாணவர், மாணவிகள் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர். 
இதுதொடர்பாக, பேராசிரியர் எஸ். ராகவன் கூறியது: மின்னணு பொறியியல் உலகில் உள்ள மாணவர்களுக்கு முன்னோடியாக இந்த கேக்கை என்ஐடி மாணவர்கள் தயாரித்திருப்பது பெருமைக்குரியது. 
வழக்கமாக கேக் மீது ஒட்டப்படும் தூக்கி எறியக் கூடிய தாள்களில் வரைபடமாக இல்லாமல் கேக் தயாரிக்கப் பயன்படுத்தும் இதரவகை உணவுப் பொருள்களை கொண்டே இந்த வரைபடத்தை துல்லியமாக இடம்பெறச் செய்துள்ளனர். மேலும், இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளனர். ஸ்மித் வரைபட கேக் என கூகுள் தளத்தில் பதிவிட்டால் இனி என்ஐடி பெயரும் தவறாமல் இடம்பெயரும் என்றார் அவர்.
இந்த கேக்கை வடிவமைத்த மாணவர்களில் ஒருவரான பரஞ்சில் பட்நகர் கூறியது:
உண்ணத் தகுந்த காகிதம், வண்ணங்கள், உருளைக்கிழங்கு, சோளம், சர்க்கரை ஆகியவற்றின் கலவையை கணினி அச்சில் பயன்படுத்தி நீர்கசியும் வகையில் படரச் செய்து துல்லியமாக இந்த வரைபடத்தை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கினோம். ரூ.40 லட்சம் மதிப்புள்ள கருவியில் உருவாக்க வேண்டிய வரைபடத்தை கடின உழைப்பின் மூலம் கணினி வரைகலையில் சாத்தியமாக்கினோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments