சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது
சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி.
சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் சுமார் 2 கோடி தேவேந்திர குல மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் விருப்பம் பட்டியல் இனத்தில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தான். இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் இடைத்தேர்தலை சந்திக்க விரும்பவில்லை என்றுதான் கூறமுடியும். அதே நேரம் இடைத்தேர்தல் தள்ளி போவதற்கான காரணத்தை ஏற்க முடியாது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் வாக்குகளுக்காக மட்டுமே எதிர்க்கின்றனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்களின் அடையாளத்தை மீண்டும் எடுக்கும் அமைப்புகளுடன் கூட்டணி அமைப்போம். தமிழகத்தின் கல்வியின் தரம் மிகத் தாழ்ந்து போவதற்கு துணைவேந்தர் நியமன முறைகேடு முக்கிய காரணமாகும். அதேவேளையில், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரம் சிறப்பாக உள்ளது.
சுயமரியாதையின் தந்தை பெரியார் எனக்கூறி அவரை தமிழ்நாட்டு அளவில் பார்க்காதீர்கள். லெனின், காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் சுயமரியாதைக்கான போராட்டங்களை உலகளவில் நடத்தினர். எனவே, சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றார் க.கிருஷ்ணசாமி.