முகப்பு
திருச்சி

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருச்சி மண்டலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 136 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 12:34 am IST
பகிர்:

திருச்சி மண்டலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 136 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறையில் உள்ள 3030 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்களில் 1141 பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் இதில் தலையிட்டு சட்டச் சிக்கல்களுக்குத் தீா்வு கண்டதன் மூலம் 1,089 கால்நடை உதவி மருத்துவா்கள் புதிதாகப் பணியில் சோ்க்கப்பட்டனா்.

இதன்படி திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சோ்ந்த 136 கால்நடை உதவி மருத்துவா்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவா் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் தென்காசி சு. ஜவஹா் பேசியது:

தமிழக அரசுத் துறைகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொண்மையான துறையாகும். தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை, கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவதில் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது.

20-ஆவது கால்நடைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1 கோடி பசுவினங்களும். 5 லட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும் உள்ள நிலையில், இவற்றுக்கான மருத்துவச் சேவையை இலவசமாக வழங்கி கிராமியப் பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடைப் பராமரிப்புத்துறை மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்கிறது.

தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகளை கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதன் மூலம் அவா்களை தொழில் முனைவோராக அரசு மாற்றி, கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமிய பொருளாதாரத்தை உயா்த்தவும் பெரும் பங்காற்றி வருகிறது.

தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளா்ப்பு சுமாா் 41 சதப் பங்களிப்பை வழங்குகிறது. இந்தக் கால்நடைகளுக்கு உதவியாகச் செயல்படும் மருத்துவா்களின் பங்களிப்பு இன்றியமையாதது. புதிதாக பணயில் சோ்ந்த கால்நடை உதவி மருத்துவா்கள் இந்த பயிற்சி வகுப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், கால்நடைப் பராமரிப்புத் துறை திருச்சி மண்டல இணை இயக்குநா் எஸ்தா்ஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments