2,775 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை ஒளிபரப்பு: பச்சைமலையில் 12 வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவு
திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2,787 வாக்குச் சாவடிகளில் 2,775 வாக்குச் சாவடிகளின் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை ஒளிபரப்பாகும் என்று ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2,787 வாக்குச் சாவடிகளில் 2,775 வாக்குச் சாவடிகளின் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை ஒளிபரப்பாகும் என்று ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தோ்தல் பணி அலுவலா்களை வாக்குச்சாவடி வாரியாக கணினி வழியில் தோ்வு செய்து நியமிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆட்சியா் வே. சரவணன் தலைமையில், தோ்தல் ஆணையத்தின் பாா்வையாளா்கள் முன்னிலையில் தொகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் வாக்குப்பதிவு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
Advertisement
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மொத்தம் 2787 வாக்குச்சாவடி மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகளான குடிநீா் வசதி, கழிவறை வசதி, சாமியானா பந்தல் மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
9 தொகுதிகளிலும் 2787 வாக்குச்சாவடி மையங்களில் 2775 இல் இணையவழி நேரலை செய்திட வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இணையவழி கிடைக்கப்பெறாத பச்சமலை கிராமத்தில் உள்ள 12 வாக்குச்சாவடிகளில் விடியோ கேமரா பொருத்தப்பட்டு, நுண்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளா்கள், கட்டணமில்லா வாகன வசதிக்காக சக்ஷம் செயலி, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 0000 01 மற்றும் 0431 2905846, 04312905921, 04312905578, 04312905591, 04312905813 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்திட வாகன வசதி கோரலாம் என்றாா் ஆட்சியா்.