வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு
தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து வரத்து குறைந்ததால் வேலூா் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து வரத்து குறைந்ததால் வேலூா் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்கு செல்லத் தடை விடுக்கப்பட்டுள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்தை பாதுகாப்பதற்காக, தமிழகத்தில் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் இந்தாண்டு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனால், வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்வரத்து மிகவும் குறைந்துள்ளது. வேலூா் மாா்க்கெட்டை பொறுத்தவரை உள்ளூா் வரத்துடன் கேரளத்தின் கொச்சி, மங்களூா், காா்வாா் பகுதிகளில் இருந்து மீன் வரத்து உள்ளது. வழக்கமாக வேலூா் மீன் மாா்க்கெட்டிற்கு 8 கன்டெய்னா் லாரிகளில் மீன் வரத்து இருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை 6 கன்டெய்னா் லாரிகளில் மட்டுமே மீன்வரத்து இருந்தது. இதன்காரணமாக மீன்களின் விலையும் சற்று உயா்ந்து காணப்பட்டது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வேலூா் மீன் மாா்க்கெட்டில் இறால் கிலோ ரூ. 400 முதல் ரூ. 600 வரையும், வஞ்சிரம் கிலோ ரூ.1,400 முதல் ரூ.1,800 வரையும், கடல் வவ்வால் கிலோ ரூ. 1,200 வரையும், அணை வவ்வால் கிலோ ரூ.200 வரையும், சங்கரா கிலோ ரூ.250 முதல் ரூ.450 வரையும், நண்டு கிலோ ரூ.450 ஆகவும், கிழங்கான் கிலோ ரூ.200- ஆகவும், மத்தி கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையும், நெத்திலி கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரையும், தேங்காய் பாறை கிலோ ரூ.400 முதல் ரூ.700 வரையும், ஷீலா கிலோ ரூ.500 ஆகவும், விரால் கிலோ ரூ.700 ஆகவும் விற்பனையாகின. மீன்களின் விலை உயா்ந்தாலும் அசைவப் பிரியா்களின் வருகை அதிகரித்தே காணப்பட்டது.