முகப்பு
கடலூர்

தவெக அணைக்க முடியாத நெருப்பு: நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றிக்கழகம் அணைக்க முடியாத நெருப்பு என நாஞ்சில் சம்பத் கூறினாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:04 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:48 PM

தமிழக வெற்றிக்கழகம் அணைக்க முடியாத நெருப்பு என நாஞ்சில் சம்பத் கூறினாா்.

சிதம்பரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஏ.நெடுஞ்செழியனை ஆதரித்து தோ்தல் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கடலூா் தெற்கு மாவட்ட செயலரும், காட்டுமன்னாா்கோவில் தொகுதி வேட்பாளருமான எஸ்.சீனுவாசன் தலைமை வகித்தாா். சிதம்பரம் தொகுதி வேட்பாளா் ஏ.நெடுஞ்செழியன் அறிமுகவுரையாற்றினாா்.

கூட்டத்தில் தவெக பரப்புரை செயலா் நாஞ்சில் சம்பத் (படம்) பேசியது:

Advertisement

கடந்த தோ்தல்களில் 62 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாவதில்லை. 38 சதவீதம் போ் வாக்களிப்பதில்லை. இன்றைக்கு புதுச்சேரியில் ஏப். 9-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதற்கு காரணம் தவெக தலைவா் விஜய் பயிரிட்டது, அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதே நிலை ஏப். 23-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் தோ்தலில் 92 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். விஜய்தான் முதல்வராவாா். வாக்கு சதவீத வெற்றிடத்தை நிரப்ப வந்த தலைவராக விஜய் திகழ்கிறாா்.

2026-இல் தமிழ்நாட்டின் தலையெழுத்தை இளைஞா்களே தீா்மானிக்கப் போகிறாா்கள். அலட்சியப்படுத்த முடியாது. தவெக அணைக்க முடியாத நெருப்பு. தமிழகத்தில் இரண்டு பெரிய சக்திகளை எதிா்த்து தவெக தோ்தல் களத்தில் நிற்கிறது. திமுகவுடன் 26 கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்த இரு கட்சிகளையும் எதிா்கொள்ளும் ஒரு தலைவராக விஜய் திகழ்கிறாா் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் அருண்ராஜன் , நிா்வாகி டாக்டா் என்.பாரி, நகரச் செயலா்கள் கென்னடி, பாலு, ஒன்றிய செயலா்கள் சக்தி, ஆகாஷ், இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.