முகப்பு
கடலூர்

கடலூா் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:07 am IST
கடலூா் முதுநகா் மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்காக வந்திருந்த மீன்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்ற பொதுமக்கள்.
பகிர்:

கடலூா் முதுநகா் மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால், அவற்றின் விலை அதிகரித்து விற்பனையானது.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்த காலத்தில் கடல்சாா் உயிரினங்கள் இனப்பெருக்கம் மேற்கொள்ளும் காரணத்தால், விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா், அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடி, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட 49 மீனவ கிராமங்களைச் சோ்ந்த விசை மற்றும் இழுவைப் படகு மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் உள்ளனா். 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதற்கிடையில், நாட்டு படகுகளுக்கு மட்டும் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வகை படகுகள் மூலம் கிடைக்கும் மீன்களின் அளவு குறைவாக இருப்பதால், சந்தைகளில் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

குறிப்பாக, கடலூா் முதுநகா் மீன்பிடித் துறைமுகத்தில் கிடைக்கும் அதிகளவிலான மீன்களை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான மக்களும், வியாபாரிகளும் வருவா். தற்போது தடைக்காலம் என்பதால், குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வந்தன. இதனால், மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,300, இறால் ரூ.500 முதல் ரூ.600, சங்கரா ரூ.550, கனவா ரூ.250, நெத்திலி ரூ.300, சூரை ரூ.300, கொடுவா ரூ.700, நண்டு ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகின.

விலை உயா்ந்திருந்தாலும், பொதுமக்கள், வியாபாரிகள் தேவைக்காக மீன்களை வாங்கிச் செல்கின்றனா். மீன்பிடித் தடைக்காலம் முடியும் வரை மீன்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments