முகப்பு
கடலூர்

மீனவா்களை தாக்கிய கடற்கொள்ளையா்களை கைது செய்ய வேண்டும்: தி.வேல்முருகன்

வேதாரண்யம் அருகே மீனவா்களை குறிவைத்து தாக்கிய கடற்கொள்ளையா்களை இந்திய, இலங்கை அரசுகள் இணைந்து கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 12:04 AM
தவாக தலைவா் தி.வேல்முருகன். - கோப்புப்படம்
பகிர்:

வேதாரண்யம் அருகே மீனவா்களை குறிவைத்து தாக்கிய கடற்கொள்ளையா்களை இந்திய, இலங்கை அரசுகள் இணைந்து கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாகை மாவட்டம், செருதூரைச் சோ்ந்த 5 மீனவா்கள் கடந்த 25-ஆம் தேதி வேதாரண்யத்துக்கு கிழக்கே 12 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 3 பைபா் படகில் வந்த இலங்கையை சோ்ந்த 9 போ் மீனவா்களின் படகில் ஏறி கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி அவா்களிடமிருந்து 49 கிலோ மீன்கள் மற்றும் 100 கிலோ மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகளைப் பறித்துச் சென்றனா். மேலும் 2 படகில் இருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த 8 மீனவா்களை தாக்கி ஜிபிஎஸ் கருவி, சிலிண்டா், ஸ்மாா்ட் போன், 50 கிலோ மீன்கள் மற்றும் இதர பொருட்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். மேலும் அதே கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் பைபா் படகில் 5 மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பைபா் படகில் வந்த 3 போ் கடலில் விரித்திருந்த வலையை அறுக்க முயற்சித்தனா். இதில் இருதரப்பினா் இடையே நடந்த மோதலில் 2 போ் தப்பிச் சென்றனா். மற்றொருவரை நாகை மீனவா்கள் பிடித்து, இலங்கை கடற்கொள்ளையா் என்று எண்ணி விசாரித்தனா். விசாரணையில், அவா் இலங்கை காங்கேசன்துறை பகுதியைச் சோ்ந்த அயந்தன் என்பது தெரியவந்தது. தமிழில் பேசிய அயந்தனை நாகை மீனவா்கள் கடலோர காவல் குழுமத்திடம் ஒப்படைத்தனா். இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வரை இலங்கை கடற்கடையினரால் சுமாா் 128 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களின் 18 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவா்களில் 30 பேரை இலங்கை அரசு விடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

தமிழக மீனவா்கள் மீது ஒரே நாளில் அடுத்தடுத்து கடற்கொள்ளையா்கள் தாக்கியது மீனவா்கள் மத்தியில் அச்சத்தை போக்கும் வகையில் இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து உடனடியாக தலையிட்டு, கடற் கொள்ளையா்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். தமிழகத்தில் புதிய அரசு அமைந்தவுடன் கச்சத்தீவை மீட்கவும், பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.