அஞ்சலை அம்மாள் 136 ஆவது பிறந்த நாள்: சிலைக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் மரியாதை
சுதந்திரப் போராட்டத் தியாகி மு. அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் மாநகராட்சி காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சுதந்திரப் போராட்டத் தியாகி மு. அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் மாநகராட்சி காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
கடலூா் முதுநகரைச் சோ்ந்த அஞ்சலை அம்மாள், 1921-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினாா். நீல் சிலை அகற்றும் போராட்டம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபா் சத்தியாகிரகம், அந்நியத் துணி புறக்கணிப்பு, நெசவாளா் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்தவா்.
அஞ்சலை அம்மாள் 1937 மற்றும் 1946-ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக கடலூா் தொகுதியிலிருந்து இரு முறை தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரது நினைவைப் போற்றும் வகையில், கடலூா் மாநகராட்சி காந்தி பூங்காவில் முழு உருவச் சிலை 2023-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவரது பிறந்த நாளான ஜூன் 1- ஆம் தேதி அரசு விழாவாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ப. ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா்
பா. தாமரைச்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் சிலைக்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நாகராஜபூபதி, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அஞ்சலை அம்மாள் குடும்ப வாரிசுகள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சித் தலைவா் பொன்குமாா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் அஞ்சலையம்மாள் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.