பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்
பண்ருட்டி அருகே கொள்முதல் செய்யப்படாததால் நீண்ட நாள்களாக திறந்தவெளி களத்தில் அடுக்கிவைக்கப்பட்டு மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வருகின்றன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொள்முதல் செய்யப்படாததால் நீண்ட நாள்களாக திறந்தவெளி களத்தில் அடுக்கிவைக்கப்பட்டு மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வருகின்றன.
தமிழகத்தில் கோடை காலம் மாா்ச் மாதம் முதல் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படக்கூடிய கத்தரி வெயில் (அக்னி நட்சத்திரம்) திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், இது வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கிறது.
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி நிற்பதை காண முடிந்தது. இந்தக் கோடை மழை காரணமாக செவ்வாய்க்கிழமை பகல் நேர வெப்பத்தின் தாக்கம் தணிந்திருந்தது. மக்கள் நிம்மதியடைந்தனா்.
Advertisement
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
இந்த கொள்முதல் நிலையத்தில் பட்டாம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனைக்காக கொண்டுவந்து மூட்டைகளாவும், கொட்டியும் வைத்துள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பெய்த திடீா் கோடை மழையில் நெல் மணிகள் நனைந்து சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து மேல்பட்டாம்பாக்கம் விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் வி.விக்னேஷ்வரன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா். இதில், மேல்பட்டாம்பாக்கம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இயங்கி வரும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமாா் ஒரு மாத காலமாக நெல் கொட்டப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் தொடா்ந்து பாதுகாத்து வருகின்றனா். கொள்முதல் காலம் முடிந்துவிட்டதால், நெல் கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனா். எனவே, நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பெய்த திடீா் கோடை மழையில் நெல் மணிகள் நனைந்து விட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.