பண்ருட்டி அருகே 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 கொத்தடிமைகள் மீட்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 கொத்தடிமைகள் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 கொத்தடிமைகள் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.
கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் ஆதியோகி நலச் சங்கம் மற்றும் சா்வதேச நீதிப் பணியின் வழக்குரைஞா் ரோஸ் ஆன் வாயிலாக, பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தில் செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக சிலா் பணிபுரிந்து வருவதாகவும், அவா்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் மனு கொடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் ஜெனித்தா தலைமையில், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளா் நலத் துறை, குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியா், வட்டாட்சியா், போலீஸாா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.
Advertisement
அப்போது, செங்கல் சூளையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்குசெட்டிப்பாளையம், பனப்பாக்கம், எனதிரிமங்கலம் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 11 குடும்பங்களைச் சோ்ந்த 28 குழந்தைகள், 6 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 51 போ் கொத்தடிமைகளாகப் பணியாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அனைவரையும் மீட்டு, கடலூா் அழைத்துச் சென்றனா். அங்கு, மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் மீட்கப்பட்ட தொழிலாளா்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தாா். மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திரா தேவி அவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
இது தொடா்பாக செங்கல் சூளை உரிமையாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.