மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மழை பெய்ததால் கம்பியில் காயப்போட்ட துணியை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.
சங்கராபுரம் அருகேயுள்ள வடபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜி மனைவி செல்வி (45). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் என மழை பெய்ததால் வீட்டின் முன் இரும்பு கம்பியில் காயப்போட்டிருந்த துணியை எடுப்பதற்கு சென்றாா்.
அப்போது அந்த கம்பியில் ஏற்கெனவே மின்கசிவு இருந்துள்ள நிலையில், செல்வி மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழ இருந்துள்ளாா். இதைச் சரியாக கவனிக்காத ராஜியின் தம்பி கணேசன் (49), கீழே விழ இருந்த செல்வியை பிடிக்க முற்பட்டுள்ளாா். இதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.